தலைவா - திரை விமர்சனம்
விஜய் + விஜய் கூட்டணியில் ரமலான் விருந்தாக வெளிவந்துள்ளது 'தலைவா'. விஜய்யும் சந்தானமும் ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார்கள், பிழைப்பிற்கு இதுவென்றால் விஜய்யின் பொழுதுபோக்கு ஆடுவது. நடனப்போட்டியில் விஜய்யின் 'தமிழ்ப்பசங்க' குழு பங்கு பெறத் தேர்வாகிறது, இந்த அணியில் அமலா பாலும் இணைந்து நடனப் போட்டியில் வெல்கிறார்கள்.
இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்க,விஜய்யின் தந்தை சத்யராஜின் சம்மதம் பெற விஜய்யுடன் அமலா பாலும் அவர் தந்தை சுரேஷ்ஷும் இந்தியாவிற்கு வருகிறார்கள். மறைந்து வாழும் தந்தை சத்யராஜ் தவறான தொழில் செய்கிறாரோ என்று வருந்தும் விஜய்க்கு ஏன்? எதற்கு என்று பின்னணி, முன்னணி விளக்கப்பட ஒரு கட்டத்தில் விஜய்யே அம்மக்களுக்குத் தலைவனாகும் நிலைமை உருவாகிறது. எதிரிகளை எப்படி பழி வாங்குகிறார், மாஹிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறார் என்பது மிச்சம் மீதி சுவாரஸ்யங்கள்.
முற்பாதி நேரம் போவதே தெரியவில்லை, பிற்பாதியின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேவர் மகன், நாயகன் படச்சாயல்கள் இருந்தாலும் விஜய்யை இவ்வகைப் பாத்திரத்தில் பார்ப்பது நமக்கெல்லாம் புதிது. விஜய் ஆடல், காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார், வயது குறைந்து கொண்டே வருகிறதா? மனிதர் கலக்கியிருக்கிறார். முதல் பாதி காதல், கலாட்டா எனக் குதூகலமாகப் போகிறது. முழு நேர நகைச்சுவை அல்லது காதல் படத்தில் விஜய் நடித்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்களை ஏங்க வைக்கிறார். அமலா பாலிற்கு மற்றப்பட நாயகிகளைப் போல கவர்ச்சிக்காக மட்டும் வந்து செல்வது போலல்லாமல் நடிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
நாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன் சந்தானத்திடம் பேசி ஒப்பந்தம் செய்து விடுவார்களோ? என்னமோ, எனக்கு டான்ஸ் பிடிக்காது, ஏன்னா எனக்கு வராது, என்பது போன்ற சந்தானத்தின் ஒரு வரி நகைச்சுவை வசனங்களும் அலப்பறைகளும் பேஷ் பேஷ்.. ரசிக்கும்படி உள்ளன. சத்யராஜ் அளவாகவும் நிறைவாகவும் நடித்திருக்கிறார். இயக்குனர் விஜய் தன் அண்ணன் உதயாவிற்கும்(வீடியோ எடுப்பவர்) ஒரு பாத்திரத்தை வழங்கியிருக்கிறார்.நாசர், உதயா, ரேகா கெளரவத்தோற்றங்களில் வந்து செல்கிறார்கள். "தப்பைச் செஞ்சாத் தான் தப்பு, தப்பைத் தட்டிக் கேட்கிறது தப்பே இல்ல" போன்ற சில உரையாடல்கள் அருமை.
பாராட்டப்பட வேண்டிய மற்றொரு நாயகன் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, சிட்னியின் அழகைக் கண்முன்னே கொண்டு வருவதாகட்டும் மும்பை நகர நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகட்டும் அவரின் கேமிரா காதல் கண்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறது. ஜி.வி. பிரகாஷின் இசையில் 'வாங்கண்ணே', 'யார் இந்த சாலையில்' என்று ஓரிரு பாடல்கள் தேறுகின்றன, 'தளபதி' பாடல் தளபதி படப்பாடல் 'தளபதி! எங்கள் தளபதி'யை நினைவுபடுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு திரையரங்கில் நெளிபவர்களின் நிலையைப் பார்த்தால் அந்தோ பரிதாபம். படத்தின் நீளம் மிகப்பெரிய குறை. இழுவையைக் குறைத்துத் தொய்வைச் சரிகட்டியிருக்கலாம்.
முற்பாதி கலகலப்பு, பிற்பாதி விறுவிறுப்பு. பிற படங்களின் சாயல்கள் இல்லாமல் இரண்டாம் பாதியில் புதுமையைப் புகுத்தியிருந்தால் 'தலைவா' ஆழமாக நின்றிருப்பான், இதயங்களை வென்றிருப்பான்.
இயக்குனரிடம் சில கேள்விகள்:
1. புத்திசாலி இளைஞனாக இருக்கும் விஜய்க்கு ஒரு தரம் கூட இந்தியா வந்து அப்பாவுடன் தங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?
2. சத்யராஜ் மகனை வெளி நாட்டில் பொத்தி பொத்தி வளர்க்கிறார், இருந்தாலும் பிள்ளையின் உயிர்ப்பாதுகாப்பிற்காக ஏன் ஆளை நியமிக்கவில்லை? மகனே நாயகன் என்பதாலா?
3. பிற்பகுதியில் விஜய் தலைவனான பிறகு கூலிங்கிளாஸ் அணிந்தே சண்டை போடுகிறார்? இருளிலும் கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டே பேசுகிறார், நடக்கிறார்? ஏன்?
4. நாயகன் படத்தைப் பார்த்து அதே சாயலைப் படத்தில் திணிக்க முயன்றது ஏன்?
5. விஜய்யின் அரசியல் அச்சாரத்திற்கு வித்திடுவது போல சிலக் காட்சிகளைத் திணித்தது ஏன்?
6. மும்பையில் ஒரு சிலரைத் தவிர அனைவரையும் தமிழில் பேச வைத்தும் பாட வைத்தும் காதில் பூ சுற்றியது ஏனோ?
குறைகள் இருப்பினும் 'தலைவா' விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் ரமலான் விருந்தே தான்.
Thanks FOR



No comments:
Post a Comment