Tuesday, 13 August 2013

NANBAN- Movie Review

நண்பன்




'திரீ இடியட்ஸ்' என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவலே ' நண்பன்', அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய பொழுதுபோக்குடன் கூடிய நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் படம். ரீமேக் ராஜாக்களே அசரும் வகையில் சங்கர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.


'திரீ இடியட்ஸ்' அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வசூலிலும் கோட்டை கட்டிய படம். அதைத் தமிழில் எடுக்கிறார்களே, அதுவும் விஜய்யை வைத்து என்றவுடன் பதறாத உள்ளங்களே இருக்காது. எத்தனை குத்துப்பாடல்களோ, எத்தனை பஞ்ச் வசனங்களோ, எத்தனை டாடா சுமோ வில்லன்களை விஜய் பந்தாடப் போகிறாரோ, பாடல், சண்டை முடிந்து போற்றிப் பாடுதல் என்று என்னமாச் சின்னாபின்னப் படுத்தப் போகிறாரோ என்று கவலையுடன் சென்றால் நல்ல வேளை, இயக்குனரின் செல்லப்பிள்ளையாக சமர்த்தாக சொன்னதை மட்டும் அழகாகவும் நிறைவாகவும் செய்து கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறார் விஜய். விஜய்யைப் பிடிக்காதவர்களுக்குக் கூட இந்தப் படத்தின் பாத்திரத்தாலும் விஜய்யின் நடிப்பாலும் பிடித்து விடும்.


மக்கள் என்னை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கவே ஆசைப்படுகிறார்கள் என்று தன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்காமல் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிப்பது விஜய்யின் எதிர்காலத்திற்கு நல்லது. இல்லையென்றால் விஜய் படங்களின் கதைகளும் ஓட்டமும் ஒரே மாதிரி இருந்தால் படம் பார்ப்பவருக்கு மட்டுமில்லாமல் விஜய்க்கே பிற்காலத்தில் குழப்பமாக இருக்கும். அழகும் நடனத்திறமையும் நடிப்புத் திறமையும் உள்ள அற்புதமான நடிகர் விஜய். அவர் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க இந்தப் படத்தின் வெற்றி நிச்சயம் உதவும்.


ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் சத்யன் நண்பர்கள் குழு தங்கள் கல்லூரித்தோழன் விஜய்யைத் தேடிப் பயணிக்கிறார்கள். தேடி அலையும் பயண வேளையிலே கல்லூரிக் காலத்தில் விஜய்யுடன் பழகிய நாட்களை ஸ்ரீகாந்தும் ஜீவாவும் நினைவு கூர்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையை ஒழுங்கான திசையில் மாற்றிய தோழனைப் பற்றி மருகுகிறார்கள். தேடிப் போன இடத்தில் விஜய்யின் பெயரில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். ஏன்? என்ன? தோழன் எங்கே போனார்? அவரது இயற்பெயர் என்ன? என்பதை நண்பர்கள் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறார்களா? சுவாரஸ்யமான முடிச்சுக்களுடன் சுபம்.



விருப்பப் பாடத்தை எடுத்துப் படி, அதில் தான் சாதிக்க முடியும் மற்றவர்கள் கட்டாயத்திற்காக பிடிக்காத துறையில் சேர்ந்து தோற்பதை விட நமக்குப் பிடித்த துறையில் ஜெயிப்பது தான் சிறந்தது என்ற கொள்கைகளை விஜய் விடுதித்தோழர்களுக்கு மட்டுமில்லாமல் கடைக்கோடி ரசிகனுக்கும் படம் மூலம் தெரிவிக்கிறார்.


இப்படி கதைக்கேற்ற கதாநாயகனாக விஜய் உருவெடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பார்ப்பவரை ஏங்க வைக்கிறார்.


கதைக்கு எல்லாப் பாத்திரங்களும் அப்படிப் பொருந்திப் போகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய திருப்புமுனைப் பாத்திரமாக மிளிருகிறார். சத்யனின் நகைச்சுவையை நன்றாக ரசிக்க முடிகிறது.


ஜீவாவிற்கு அவ்வளவாக வாய்ப்பு வழங்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. ஸ்ரீகாந்த்திற்கு மறுபிரவேசம் என்று சொல்லுமளவிற்கு மனிதர் ஜமாய்த்திருக்கிறார். அதிலும் கல்லூரி கால கட்டத்தில் கல்லூரி மாணவராகவே இளைத்திருக்கிறார். சத்யராஜைப் பார்க்கும் போது ஹிந்திப்படத்தின் பொமன் இரானியைத் தொடர்புபடுத்தாமல் இருக்க முடியவில்லை. சத்யராஜ் திறமையான நடிகர் தான், படத்தில் கல்லூரி முதல்வர், ஆனால் ஆங்கிலம் வருவேனா என்கிறது. இந்தப் படத்தில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.


ஹிந்தியில் கரீனா கபூர் போல தமிழில் ஒல்லியான ஜீரோ சைஸ் அழகி வேண்டும் என்று சங்கர் இலியானாவைக் கதாநாயகி ஆக்கி விட்டாரோ தெரியவில்லை. இலியானா சாப்பிடுவாரா? மாட்டாரா? என்று சாலமன் பாப்பையாவையோ லியோனியையோ பட்டிமன்றம் நடத்த விடலாம். அப்படி ஒரு ஒல்லி மேனி. விஜய் கொஞ்சம் இறுக்கி அணைத்திருந்தால் கூட நொறுங்கியிருப்பார். பாடல் காட்சிகளில் தாராளம். தெலுங்கு ரசிகர்களுக்கு ஒல்லி மேனியா பிடிக்குமோ என்னமோ? தமிழில் பரிதாபமாக இருக்கிறார். அனுயா அக்கா வேடத்திற்கு வந்தாச்சு. சங்கர் படம் என்பதாலும் பெரிய நடிகர் பட்டாளம் என்பதாலும் சம்மதித்திருப்பார் போல. இனி அக்கா, அண்ணி வேடங்களில் அனுயாவைத் திரையில் பார்க்கலாம்.


திரீ இடியட்ஸ் திரைப்படத்தையும் நண்பன் படத்தையும் இணைத்து காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒருவரது நடிப்பை மற்றவருடன் தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது. இந்தத் திரைப்படத்தை ஹிந்தியில் பார்த்தவுடன் இது போன்ற திரைப்படங்கள் தமிழில் வரவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்திருக்கும். அந்தக் குறையைச் சங்கர் தீர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட இந்தித் திரைப்படத்தையே தமிழ் நடிக- நடிகையர் வைத்து கனகச்சிதமாக ரீமேக்கியிருக்கிறார். சில காட்சிகளையோ வசனங்களையோ மாற்றினால் கூட ஹிந்திப் படத்தின் உயிர் விட்டுப் போய் விடும் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். சங்கர் சிற்சில குறைகளைக் களைந்திருக்கலாம். இருந்தாலும் குறைகள் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டையாகவில்லை.




ரசூல் பூக்குட்டியின் சிறப்பு ஒலிப்பதிவு அருமை. ஹாரிஜ் ஜெயராஜ் இசையில் 'என் பிரண்டைப் போல' மற்றும் 'ஒல்லி பெல்லி' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கின்றது. "சச்சின் டென்டுல்கரை மியூசிக் டைரக்டரா ஆகச் சொல்லியும் ஏ.ஆர்.ரகுமானை கிரிக்கெட் விளையாடச் அவங்க அப்பா சொல்லியும் இருந்தா எப்படி இருக்கும்?" மதன் கார்க்கி, சங்கரின் உரையாடல்கள் அற்புதம்(உபயம்-திரீ இடியட்ஸ்).

மாணவர்கள் மது அருந்துவது, பேராசிரியர்களை எதிர்த்துப் பேசுவது, நண்பர்களுக்காக மாடியிலிருந்து குதிப்பது இவற்றையெல்லாம் மாணவர்கள் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றினாலே போதும்.


படத்தின் உயிர் என்றால் படம் சொல்லும் செய்திகள். எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று தாங்களே தீர்மானிக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும் ஐந்து பெற்றோரில் மூன்று பெற்றோர் திருந்தினால் கூட மகிழ்ச்சியே. அதே போல புரியாமல் மனனம் செய்யும் மாணவரையும் மனப்பாடம் செய்து வாந்தியெடுக்கும் கல்வி முறையையும் படம் சாடி இருக்கிறது.


இந்தப் படம் பார்க்கும் அனைவரையும் தங்கள் கல்லூரி காலத்திற்கு அழைத்துச் சென்று தன் நண்பர்களைப் பற்றி நினைத்து உருக வைக்கும். இந்தத் திரைப்படம் போல் பல திரைப்படங்கள் வெளிவர வேண்டும். அவை சொந்த முயற்சியானாலும் சரி, இரவல் கதையானாலும் சரி. ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பும் அது தான். இப்படிப்பட்ட கதையம்சம் உள்ள திரைப்படங்களே கால வெள்ளத்தால் அழியாமல் நிலைத்து நிற்பன. நண்பன் – வந்தான் வென்றான்.

Thanks to
http://tamilthiraipadangal.blogspot.in

No comments:

Post a Comment